பொருட்பால் · குறள் 659 / 1330
66. வினைத்தூய்மை

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை.

What is secured by causing tears to others will be lost with tears. But good deeds will result in good later.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் - ஒருவன், தீயவினைகளைச் செய்து பிறர் இரங்கக் கொண்ட பொருளெல்லாம் இம்மையிலே அவன் தான் இரங்கப் போகாநிற்கும்; நற்பாலவை இழப்பினும் பிற்பயக்கும் - மற்றைத்தூய வினையான் வந்த பொருள்கள் முன் இழந்தானாயினும் அவனுக்குப் பின்னர் வந்து பயன் கொடுக்கும். (பின் எனவே, மறுமையும் அடங்கிற்று. பொருள்களான் அவற்றிற்குக் காரணமாய வினைகளது இயல்பு கூறியவாறு.

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.

— சாலமன் பாப்பையா