பொருட்பால் · குறள் 1047 / 1330
105. நல்குரவு

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்பிறன்போல நோக்கப் படும்.

Even a mother turns her back on one whose poverty is devoid of probity.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை,அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

அறம் சாரா நல்குரவு - அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான்; ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும் - தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும். (அறத்தோடு கூடாமை - காரண காரியங்களுள் ஒன்றானும் இயையாமை. நல்குரவு - ஆகுபெயர். சிறப்பு உம்மை, அவளது இயற்கையன்புடைமை விளக்கி நின்றது. கொள்வதின்றாதலேயன்றிக் கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அதுநோக்கிச் சுற்றத்தார் யாவரும் துறப்பர் என்பதாம்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.

— சாலமன் பாப்பையா