பொருட்பால் · குறள் 918 / 1330
92. வரைவின்மகளிர்

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்பமாய மகளிர் முயக்கு.

False women’s embraces which only the ignorant desire are like the possession of evil spirits.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

வஞ்சக எண்ணங்கொண்ட "பொதுமகள்" ஒருத்தி யிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட "மோகினி மயக்கம்" என்று கூறுவார்கள்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

மாய மகளிர் முயக்கு - உருவு சொல் செயல்களான் வஞ்சித்தலை வல்ல மகளிரது முயக்கத்தை; ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப - அவ்வஞ்சனை ஆய்ந்தறியும் அறிவுடையார் அல்லார்க்கு அணங்கு தாக்கு என்று சொல்லுவர் நூலோர்.(அணங்கு - காமநெறியான் உயிர் கொள்ளும் தெய்வமகள்.தாக்கு -தீண்டல். இவ்வுருவகத்தான் அம்முயக்கம் முன் இனிதுபோன்று பின் உயிர் கோடல் பெற்றாம். இது நூலோர் துணிவுஎன்பது தோன்ற அவர்மேல் வைத்துக் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.

— சாலமன் பாப்பையா