பொருட்பால்பெரியாரைப் பிழையாமை(அதிகாரம் 90)

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும்.
Even the Lord of Heaven will be humbled from his throne if he rouses the wrath of men of mighty penance.
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால்,அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
ஏந்திய கொள்கையார் சீறின் - காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வராயின்; வேந்தனும் இடை வேந்து முரிந்து கெடும் - அவராற்றலான் இந்திரனும் இடையே தன் பதம் இழந்து கெடும். '(''வேந்தன் மேய தீம்புனல் உலகமும்'' (தொல். பொருள். அகத்.5) என்றார் பிறரும். நகுடன் என்பான் இந்திரன் பதவி பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியால் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய, அதனால் சாபமெய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதனை உட்கொண்டு இவ்வாறு கூறினார். இவை நான்கு பாட்டானும் முனிவரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.
— சாலமன் பாப்பையா
குறள் 899 / 1330
திருக்குறள் · thirukural.ai