பொருட்பால் · குறள் 898 / 1330
90. பெரியாரைப் பிழையாமை

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடுநின்றன்னார் மாய்வர் நிலத்து.

The fury of the sages like the lofty hills destroys the great race of pure men of stable fortune.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள்,நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

குன்று அன்னார் குன்ற மதிப்பின் - குன்றத்தை ஒக்கும் அருந்தவர் கெட நினைப்பாராயின்; நிலத்து நின்று அன்னார் குடியொடு மாய்வர் - அப்பொழுதே இந்நிலத்து நிலைபெற்றாற் போலும் செல்வர் தம் குடியொடும் மாய்வர். (வெயில், மழை முதலிய பொறுத்தலும் சலியாமையும் உள்ளிட்ட குணங்கள் உடைமையின், 'குன்றன்னார்' என்றார். 'மல்லல் மலையனைய மாதவர்'(சீவக.முத்தி-191) என்றார் பிறரும். நிலை பெற்றாற் போறலாவது, இறப்பப் பெரியராகலின், இவர்க்கு எஞ்ஞான்றும் அழிவில்லை என்று கருதப்படுதல்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.

— சாலமன் பாப்பையா