பொருட்பால்பகைமாட்சி(அதிகாரம் 87)

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்தஞ்சம் எளியன் பகைக்கு.
He who is cowardly, ignorant, restless and niggardly, falls an easy prey to his enemy.
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும்,இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
அஞ்சும் - ஒருவன் அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சாநிற்கும்; அறியான் - அறியவேண்டுமவற்றை அறியான்; அமைவு இலன் - பிறரோடு பொருத்தம் இலன்; ஈகலான் - இவற்றின் மேலும் யாவர் மாட்டும் இவறன்மாலையன்; பகைக்குத் தஞ்சம் எளியன் - இப்பெற்றியான் பகைவர்க்கு மிக எளியன். ('தஞ்சம்', 'எளியன்' ஒருபொருட்பன்மொழி. இந்நான்கு குற்றமும் உடையான் பகையின்றியும் அழியுமாகலின் 'தஞ்சம்', 'எளியன்' என்றார்.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.
— சாலமன் பாப்பையா
குறள் 863 / 1330
திருக்குறள் · thirukural.ai