பொருட்பால்படைச்செருக்கு(அதிகாரம் 78)

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினும் சீர்குன்றல் இலர்.
Warriors unmindful of their lives in battle will not be daunted even by the wrath of their obstructing monarch.
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்க்களத்தில் உயிரைப்பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
உறின் உயிர் அஞ்சா மறவர் - போர்பெறின் தம்முயிர்ப் பொருட்டு அஞ்சாது அதன்மேற் செல்லும் வீரர்; இறைவன் செறினும் சீர்குன்றல் இலர் - தம் இறைவன் அது வேண்டா என்று முனியினும் அவ் வீரமிகுதி குன்றார். (போர் பெற்று அறியாமையின், அது பெற்றால் அரசன் தடுப்பினும் நில்லார் என்பதாம். பிறரும் 'போரெனிற்புகலும் புனைகழல் மறவர்'(புறநா.31) என்றும்,'புட்பகைக்கு ஏவானாகலின் சாவேம் யாம் என நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப'(புறநா.68) என்றும் கூறினார்.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார்.
— சாலமன் பாப்பையா
குறள் 778 / 1330
திருக்குறள் · thirukural.ai