அறத்துப்பால் · குறள் 74 / 1330
8. அன்புடைமை

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

Out of love springs kindness. It in turn grows into inestimable prize of friendship.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

அன்பு ஆர்வமுடைமை ஈனும் - ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச் செய்த அன்பு அத்தன்மையால் பிறர் மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்; அது நண்பு என்னும் நாடாச்சிறப்பு ஈனும் - அவ்விருப்பமுடைமைதான்.அவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவறந்த சிறப்பினைத் தரும்.(உடைமை, உடையனாம் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை 'நாடாச்சிறப்பு' என்றார்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்

— சாலமன் பாப்பையா