அறத்துப்பால் · குறள் 64 / 1330
7. புதல்வரைப் பெறுதல்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ்.

Sweeter than ambrosia is the food handled by the tender hand of one’s children.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங் கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையான தாகிவிடுகிறது.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

அமிழ்தினும் ஆற்ற இனிதே - சுவையான அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து; தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு. (சிறுகையான் அளாவலாவது, 'இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் - நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல். புறநா.188)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.

— சாலமன் பாப்பையா