பொருட்பால் · குறள் 618 / 1330
62. ஆள்வினையுடைமை

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி.

Ill-luck is no disgrace; but it is a disgrace if one does not exert himself as to what should be done.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

பொறி இன்மை யார்க்கும் பழியன்று - பயனைத்தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி -அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது. (அறிய வேண்டுவன - வலி முதலாயின. 'தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை', என்பாரை நோக்கி, 'உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது' என்றார். அதனால் விடாதுமுயல்க என்பது குறிப்பெச்சம்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

— சாலமன் பாப்பையா