பொருட்பால் · குறள் 565 / 1330
57. வெருவந்தசெய்யாமை

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேஎய்கண் டன்னது உடைத்து.

The great wealth of a king who is inaccessible and assumes a fearful look, is no better than in the possession of a demon.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் - தன்னைக் காண வேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க் கண்டால் இன்னாத முகத்தினையுடையானது பெரிய செல்வம், பேய் கண்டன்னது உடைத்து - பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து. (எனவே, இவை இரண்டும் வெருவந்த செய்தலாயின, இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாது என்பது பற்றிப் 'பேய் கண்டன்னது உடைத்து' என்றார். காணுதல்: தன் வயமாக்குதல்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.

— சாலமன் பாப்பையா