பொருட்பால் · குறள் 563 / 1330
57. வெருவந்தசெய்யாமை

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

The tyrant who terrifies his subjects will soon perish.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் - குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக் கெடும் - அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும். (வெங்கோலன் என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன ஒருபொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.

— சாலமன் பாப்பையா