அறத்துப்பால் · குறள் 303 / 1330
31. வெகுளாமை

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீயபிறத்தல் அதனான் வரும்.

Do not get angry with any one; for out of anger springs forth a host of evils.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும்.இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

யார் மாட்டும் வெகுளியை மறத்தல் - யாவர்மாட்டும் வெகுளியை 'ஒழிக', தீய பிறத்தல் 'அதனான் வரும்' - ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான். (வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின் 'யார்மாட்டும்' என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்', என்றும் கூறினார்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.

— சாலமன் பாப்பையா