அறத்துப்பால் · குறள் 267 / 1330
27. தவம்

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

Gold shines all the more in fire; those who do penance become mellowed through suffering.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

புடமிட்டு சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல் தவம் செய்கின்றவரை துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

சுடச்சுடரும் பொன் போல் - தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளி மிகுமாறு போல, நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளிவிடும். தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும். ( 'சுடச்சுடரும் பொன் போல்' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ஒளி போலப் பொருள்களை விளக்கலின். 'ஒளி' என்றார்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

நெருப்பு சுடச்சுடப் பொன்னின் ஒளி பெருகுவது போலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்பவர்க்கு ஞானம் பெருகும்.

— சாலமன் பாப்பையா