அறத்துப்பால் · குறள் 259 / 1330
26. புலான்மறுத்தல்

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று.

Far nobler than a thousand oblations on fire is an act of abstinence from flesh.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை
நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.

— சாலமன் பாப்பையா