அறத்துப்பால் · குறள் 258 / 1330
26. புலான்மறுத்தல்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

Men of clear vision abstain from the flesh of a slaughtered animal.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார், உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் - ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார். ( 'தலைப்பிரிவு' என்பது ஒரு சொல். பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின், 'உண்ணார்' என்றார்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.

— சாலமன் பாப்பையா