அறத்துப்பால் · குறள் 165 / 1330
17. அழுக்காறாமை

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்வழுக்காயும் கேடீன் பது.

The envious need no enemies to work their own ruin; for they find in their envy their sufficient foe.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது - அழுக்காறு பகைவரைஒழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும். ('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்

— சாலமன் பாப்பையா