அறத்துப்பால் · குறள் 152 / 1330
16. பொறையுடைமை

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனைமறத்தல் அதனினும் நன்று.

Put up always with one’s transgressions. Far greater than one’s forbearance is one’s oblivion of them.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல் அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின்அப்பொறையினும் நன்று. ('மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும் பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறத்தலை 'அதனினும் நன்று' என்றார்)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.

— சாலமன் பாப்பையா