அறத்துப்பால் · குறள் 151 / 1330
16. பொறையுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.

The earth sustains even those who dig into her. To bear with those who slander us is the crown of virtue.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம். (இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்

— சாலமன் பாப்பையா