அறத்துப்பால் · குறள் 146 / 1330
15. பிறனில் விழையாமை

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்.

Four evils, enmity, sin, fear and disgrace dog one who covets another’s wife.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை,தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

இல் இறப்பான்கண் - பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம் - பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம்.(எனவே, இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறு பாட்டானும் பிறன் இல் விழைவான்கண் குற்றம் கூறப்பட்டது.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.

— சாலமன் பாப்பையா