காமத்துப்பால் · குறள் 1216 / 1330
122. கனவுநிலையுரைத்தல்

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்காதலர் நீங்கலர் மன்.

If only there was no such thing as waking hours, my lover would never desert me in my dreams.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

நனவு மட்டும் திடீரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

(இதுவும் அது.) நனவென ஒன்று இல்லையாயின் - நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்; கனவினான் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார். ('ஒன்று' என்பது, அதன் கொடுமை விளக்கி நின்றது. அஃது இடையே புகுந்து கனவைப் போக்கி அவரைப் பிரிவித்தது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. கனவிற் பெற்று ஆற்றுகின்றமை கூறியவாறு.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.

— சாலமன் பாப்பையா