காமத்துப்பால் · குறள் 1211 / 1330
122. கனவுநிலையுரைத்தல்

காதலர் தூதொடு வந்த கனவினுக்குயாதுசெய் வேன்கொல் விருந்து.

With what feast may I entertain the dream that has brought glad tidings of my lover?

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

(தலைமகன் தூது வரக் கண்டாள் சொல்லியது). காதலர் தூதொடு வந்த கனவினுக்கு -யான் வருந்துகின்றது அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு என் மாட்டு வந்த கனவினுக்கு; விருந்து யாது செய்வேன் -விருந்தாக யாதனைச் செய்வேன்? ('விருந்து' என்றது விருந்திற்குச் செய்யும் உபசாரத்தினை. அது கனவிற்கு ஒன்று காணாமையின், 'யாது செய்வேன்' என்றாள்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?

— சாலமன் பாப்பையா