காமத்துப்பால் · குறள் 1139 / 1330
114. நாணுத்துறவுரைத்தல்

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்மறுகின் மறுகும் மருண்டு.

‘Nobody knows my secret’ I said to myself; but my angry love rages in the market-place to my utter disgrace.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

(இதுவும் அது.) எல்லாரும் அறிகிலார் என்று - யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர், இனி அவ்வாறு நில்லாது யானே வெளிப்பட்டு அறிவிப்பல் என்று கருதி; என் காமம் மறுகில் மருண்டு மறுகும் - என் காமம் இவ்வூர் மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது. (மயங்குதல் - அம்பலாதல், மறுகுதல் - அலராதல், 'அம்பலும் அலருமாயிற்று'. இனி 'அறத்தொடு நிற்றல் வேண்டும்', என்பதாம் 'அறிவிலார்' என்பதூஉம் பாடம்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.

— சாலமன் பாப்பையா