பொருட்பால் · குறள் 999 / 1330
100. பண்புடைமை

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்பகலும்பாற் பட்டன்று இருள்.

Even the wide world darkens at noon to the sullen who fails to gladden the hearts of men.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

நகல் வல்லர் அல்லார்க்கு - பண்பின்மையான் ஒருவரோடு கலந்து உள்மகிழ்தல் மாட்டாதார்க்கு; மாயிரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று - மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கண் கிடந்ததாம். (எல்லாரோடும் கலந்தறியப் பெறாமையின் பண்பிலார்க்கு உலகியல் தெரியாது என்பார், 'உலகம் இருளின்கண் பட்டது' என்றார். 'பாழ்பட்டன்று இருள்' என்று பாடம் ஓதி, 'இருள் நீங்கிற்றன்று' என்று உரைப்பாரும் உளர்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.

— சாலமன் பாப்பையா