அறத்துப்பால் · குறள் 54 / 1330
6. வாழ்க்கைத் துணைநலம்

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின்.

Is there anything greater than a woman if only she is the citadel of chastity?

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

பெண்ணின் பெருந்தக்க யாஉள-ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின். (கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவனபிற இன்மையின் 'யாஉள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?

— சாலமன் பாப்பையா