பொருட்பால் · குறள் 456 / 1330
46. சிற்றினஞ்சேராமை

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்குஇல்லைநன் றாகா வினை.

A good progeny awaits the pure. There is no effort of one endowed with good company but bears fruit.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் - மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும், இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை. (காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம் நன்று ஆகும்'. என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.

— சாலமன் பாப்பையா