அறத்துப்பால் · குறள் 40 / 1330
4. அறன்வலியுறுத்தல்

செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி.

To do good and to avoid evil must be the law of our being.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

ஒருவற்குச் செயற்பாலது அறனே - ஒருவனுக்குச் செய்தற் பான்மையானது நல்வினையே; உயற்பாலது பழியே- ஒழிதற்பான்மையது தீவினையே. ( 'ஓரும்' என்பன இரண்டும் அசைநிலை. தேற்றேகாரம் பின்னும் கூட்டப்பட்டது. பழிக்கப்படுவதனைப் 'பழி' என்றார். இதனான் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

— சாலமன் பாப்பையா