அறத்துப்பால் · குறள் 295 / 1330
30. வாய்மை

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.

Far greater than a benefactor or an ascetic is one whose words come from the depths of truth.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும்,தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

மனத்தொடு வாய்மை மொழியின் - ஒருவன் தன்மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின், தவத்தொடு தானம் செய்வாரின் தலை - அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன். (மனத்தொடு பொருந்துதல் - மனத்திற்கு ஏறுதல். புறமாகிய மெய்யால் செய்யும் அவற்றினும் அகமாகிய மனம் மொழிகளால் செய்யும் அது பயனுடைத்து என்பதாம்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.

— சாலமன் பாப்பையா