அறத்துப்பால் · குறள் 263 / 1330
27. தவம்

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்மற்றை யவர்கள் தவம்.

In their ministering to the needs of the ascetic, verily the householders have become oblivious of their penance.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக்கூடாது.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

மற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி நிற்பார், துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் - துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும். ( துப்புரவு - அனுபவிக்கப்படுவன. 'வேண்டியாங்கு எய்தற்' பயத்தது ஆகலின் (குறள்265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும். எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.

— சாலமன் பாப்பையா