அறத்துப்பால் · குறள் 246 / 1330
25. அருளுடைமை

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார்.

The cruel that delight in sin perhaps know not what awaits them.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள்,பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்கள் மாட்டுச் செய்யப்படும் அருளைத் தவிர்ந்து தவிரப்படும் கொடுமைகளைச் செய்து ஒழுகுவாரை, பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முன்னும் உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுகின்றமையை மறந்தவர் என்று சொல்லுவர் நல்லோர். (உறுதிப்பொருள்: அறம், 'துன்புறுதல்' - பிறவித்துன்பம் மூன்றனையும் அனுபவித்தல். மறந்திலராயின், அவ்வாறு ஒழுகார் என்பது கருத்து.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.

— சாலமன் பாப்பையா