அறத்துப்பால் · குறள் 237 / 1330
24. புகழ்

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மைஇகழ்வாரை நோவது எவன்.

Let the inglorious blame themselves. Let them not reproach others.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள் அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

புகழ்பட வாழாதார்- தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார் அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி, 'இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது' என்று தம்மை நோவாதே தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோவது என் கருதி? (புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், இகழ்வாரை என்றார்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?

— சாலமன் பாப்பையா