அறத்துப்பால் · குறள் 170 / 1330
17. அழுக்காறாமை

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

Envy never thrives; fortune never forsakes one who is free from it.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

அழுக்கற்று அகன்றாரும் இல்லை - அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - அச் செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை. (இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை

— சாலமன் பாப்பையா