அறத்துப்பால் · குறள் 16 / 1330
2. வான்சிறப்பு

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது.

If the clouds were to withhold rain not even a blade of grass would rustle on earth.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது - வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது. ('விசும்பு' ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்

— சாலமன் பாப்பையா