அறத்துப்பால் · குறள் 159 / 1330
16. பொறையுடைமை

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

Greater than an ascetic is one who endures the insolent words of the transgressor.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

எல்லை கடந்து நடந்துகொள்பவர்களின் கொடிய சொற்களைப்
பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

துறந்தாரின் தூய்மை உடையர் - இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்; இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர் - நெறியைக் கடந்தார் வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர். (தூய்மை : மனம் மாசு இன்மை. 'வாய்' என வேண்டாது கூறினார், 'தீய சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் இழிவு முடித்தற்கு.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.

— சாலமன் பாப்பையா