காமத்துப்பால் · குறள் 1282 / 1330
129. புணர்ச்சிவிதும்பல்

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்காமம் நிறைய வரின்.

If a woman’s passion becomes excessive, she should avoid even slight misunderstanding.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

(இதுவும் அது.) காமம் பனைத்துணையும் நிறைய வரின் - மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக உண்டாமாயின்; தினைத்துணையும் ஊடாமை வேண்டும் - அவரால், தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படும். ('பனைத்துணையும்' என்புழி, ஐந்தனுருபு விகாரத்தால் தொக்கது. ஊடின் வருத்தமிகும் எனப் பிறர்க்கும் உறுதி கூறுவான் போன்று, தன் விதுப்புக் கூறியவாறு.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்.

— சாலமன் பாப்பையா