அறத்துப்பால் · குறள் 122 / 1330
13. அடக்கமுடைமை

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

There is no greater wealth than self-control; treasure it as your wealth.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும்.அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை - உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாகக் காக்க - ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. (உயிர் என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.

— சாலமன் பாப்பையா