காமத்துப்பால் · குறள் 1136 / 1330
114. நாணுத்துறவுரைத்தல்

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்றபடல்ஒல்லா பேதைக்கென் கண்.

Thinking of this maid, my eyelids never close in slumber; even in dead of night my thoughts run, on the suicidal madal.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

('மடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது' என்றாட்குச் சொல்லியது) பேதைக்கு என் கண் படல் ஒல்லா - நின்பேதை காரணமாக என் கண்கள் ஒருகாலுந் துயிலைப் பொருந்தா; யாமத்தும் மன்ற மடலூர்தல் உள்ளுவேன் - அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பேன். ('பேதை' என்றது பருவம் பற்றி அன்று, மடமை பற்றி. 'இனிக் குறை முடிப்பது நாளை என வேண்டா' என்பதாம்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.

— சாலமன் பாப்பையா