காமத்துப்பால் · குறள் 1128 / 1330
113. காதற்சிறப்புரைத்தல்

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்அஞ்சுதும் வேபாக் கறிந்து.

With my lover in my heart I do not eat anything hot lest it should harm the delicate one.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

(இதுவும் அது.) காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும் - காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; வேபாக்கு அறிந்து - அவர் அதனான் வெய்துறலை அறிந்து. ('எப்பொழுதும் எம் நெஞ்சின்கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை'? என்பது குறிப்பெச்சம்.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.

— சாலமன் பாப்பையா