காமத்துப்பால் · குறள் 1117 / 1330
112. நலம்புனைந்துரைத்தல்

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போலமறுவுண்டோ மாதர் முகத்து.

Is there a dark spot on the face of my lady-love as on the shining moon which waxes and wanes?

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ.இல்லையே.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

தேய்ந்தும், வளர்ந்தும் ஒளிபொழியும் நிலவில் உள்ள சிறுகளங்கம்கூட,இந்த மங்கை நல்லாள் முகத்தில் கிடையாதே!

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

(இதுவும் அது.) (அம்மீன்கள் அங்ஙனம் கலங்குதற்குக் காரணம் யாது?) அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப்போல - முன் குறைந்த இடம் வந்து நிரம்பியே விளங்கும் மதிக்கண் போல; மாதர் முகத்து மறு உண்டோ - இம்மாதர் முகத்து மறு உண்டோ? (இடம் - கலை, மதிக்கு என்பது வேற்றுமை மயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மை பற்றி வேறுபாடறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

நட்சத்திரங்கள் ஏன் கலங்க வேண்டும்? தேய்ந்து முழுமை பெறும் ஒளிமிக்க நிலாவில் இருப்பது போல என் மனைவியின் முகத்தில் மறு ஏதும் உண்டா என்ன?

— சாலமன் பாப்பையா