பொருட்பால்இரவு(அதிகாரம் 106)

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவிலும் தேற்றாதார் மாட்டு.
Begging is endowed with all the grace of giving when the noble guest does not fail of his gifts even in dreams.
— V.R. Ramachandra Dikshitar (1949)
மு. வரதராசன் விளக்கம்
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.
— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி
இருக்கும்போது இல்லையென்று கைவிரிப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடத்தில், இல்லாதார் இரந்து கேட்பது பிறருக்கு ஈவது போன்ற பெருமையுடைய தாகும்.
— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர் விளக்கம்
கரத்தல் கனவிலும் தேற்றாதார்மாட்டு இரத்தலும் - தமக்குள்ளது கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டுச் சென்று ஒன்றனை இரத்தலும்; ஈதலே போலும் - வறியார்க்கு ஈதலே போலும். (உம்மை ஈண்டும் அவ்வாறு நின்றது. தான் புகழ் பயவாதாயினும் முன்னுளதாய புகழ் கெட வாராமையின் 'ஈதலே போலும்' என்றார், ஏகாரம் - ஈற்றசை.)
— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக் கொடுப்பதைப் போன்றதே.
— சாலமன் பாப்பையா
குறள் 1054 / 1330
திருக்குறள் · thirukural.ai