பொருட்பால் · குறள் 1013 / 1330
102. நாணுடைமை

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்நன்மை குறித்தது சால்பு.

Man clings to his body. The noble clings to modesty.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

உடலுடன் இணைந்தே உயிர் இருப்பதுபோல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா: சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது - அது போலச் சால்பு என்னும் நன்மைக் குணத்தைத் தனக்கு நிலைகளனாகக் கொண்டு, அதனை விடாது. ('உடம்பு' என்பது சாதியொருமை. நன்மை - ஆகுபெயர். உயிர் உடம்போடு கூடியல்லது பயனெய்தாதவாறு போலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம். 'ஊணைக் குறித்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்.

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.

— சாலமன் பாப்பையா